“சாராயத்த ஊத்தி கருப்பனுக்கு வையிங்கடான,
எழவெடுத்த மவனுக நேத்து வந்த புள்ளயாருக்கு வச்சிருக்கானுக!! அவென் குடிச்ச எச்சைய
குடிக்க எங் கருப்பென் என்ன தொன்னாந்து போயா நிக்கிறான்!!??”
குலதெய்வம் கும்புட ஆரம்பிக்கிறப்பலாம்
இந்த கன்னியப்பென் தண்ணிய போட்டுட்டு ஏதாவது ஏழரைய இழுக்க ஆரம்பிச்சிடுறான்
“ஏழேய்!! நான்தான் சொல்லீட்டேன்லடா..
தெரியாம அங்க வச்சிட்டாங்கனு. கருப்பனுக்கு வேற சரக்கு வாங்கி ஊத்தி வச்சிடுவோம்டா
கன்னியப்பா.. பிரச்சனை பண்ணாம வீட்டுக்கு போடா. யோவ்.. கொஞ்சமாவது வெவரம் வேணாமாயா..
எத எங்க படைக்கிறதுனு!?”
பூசாரி கொஞ்சம் பக்குவமா சொன்னதும்,
அப்போதைக்கு அமைதியாகிட்டான். இல்லனா இனியாரம் யாரும் பதில் பேச முடியாத அளவுக்கு கேள்வியும்
வசவுமா தூள் பறக்கும். கோயில் மேட்டுல நின்னுக்கிட்டு இருந்த கூட்டம் முழுக்க கன்னியப்பன்
அடுத்து என்ன பண்ண போறயான்னு பாத்துகிட்டே நின்னுச்சி.