வெள்ளி, 21 ஜூலை, 2017

நாட்டார் வாழ்வியல் கல்வெட்டு

           “தானம் கொடுக்கிற மாட்டை பல்ல பிடிச்சி பார்க்காதே!!” இந்த சொலவடை இன்றும் புழக்கத்தில் உள்ளது. நாட்டுப்புறங்களில் உள்ள மக்கள் துவங்கி, அங்கிருந்து தங்களை பிடுங்கி நகரத்திற்குள் நட்டுக் கொண்ட மனிதர்கள் வரை இந்த சொலவடையை கடக்காமலோ, உச்சரிக்காமலோ இருந்திருக்கமாட்டோம். சாதாரணமாக மக்கள் புழங்கும் சொலவடைகள், கதைகள், நாட்டார் தெய்வங்கள், பண்பாடு, அறிவியல் என அனைத்திலும் வரலாற்றின் எச்சங்கள் சிதறிக்கிடக்கின்றன. நாட்டுப்புறங்களில் புழங்கப்படும் வழக்குகள் ஒவ்வொன்றும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியவை.

           
           அரச குல கதைகளை மட்டும் புனைவுகளோடும் மிகைப்படுத்தியும் பொன் பொருளுக்காக எழுதித் தொலைத்த புலவர் பெருமகனார்கள் மக்களுக்கான வாழ்வியலை, கதைகளை வரலாறுகளை பெரும்பாலும் எழுதாமலே தவிர்த்துள்ளனர். ஆனால் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய மக்களின் மொழியாலான சொலவடைகள், வழக்குகள் - அவர்களின் வாழ்வியல் வரலாறுகள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.  “தானம் கொடுக்கிற மாட்டை…” என்கிற சொலவடை போன்றே இன்றைய தலைமுறையிலும் உயிர்ப்போடு நின்றுகொண்டிருக்கிறது மதுரை மாடக்குளம் கண்மாய்க்குள் அந்தக் கல்வெட்டு.

சனி, 11 மார்ச், 2017

இடுகாட்டுக்குள் ஒரு இலக்கியம் உயிரோடு...

          சிலப்பதிகாரம் எனும் காப்பியத்தை இதுவரை வாசித்தது இல்லை. பத்தாம் வகுப்பின் தமிழ் பாடத்தில் செய்யுளாக மனப்பாட பகுதியில் அதன் சிறிய பகுதியை படித்ததோடு சரி. ஆனால் சிலப்பதிகாரத்தின் கதை; கதை மாந்தர்கள்; கதைக் களம்; நீதி என அத்துணையும் இங்கு என்னைப் போல அனைவருக்குமே அத்துப்படி. பிறந்தது முதல் சிலப்பதிகாரத்தை வாசித்திராத என்போன்றோரும் ஏதோ ஒரு காலகட்டத்தில் இந்த கதையின்பால் ஈர்க்கப்பட்டிருப்பார்கள். கதைசொல்லிகள் சூழ்ந்த இம் மண்ணில் சிலப்பதிகாரம் எனும் இலக்கியக் காப்பியம் மக்களோடு புலங்கிக் கொண்டே இருக்கிறது. கண்ணகி என்கிற பெயரையோ; கோவலன் என்கிற பெயரையோ; மாதவி என்கிற பெயரையோ அறியாதவர்கள் யாருமே இங்கு இல்லை எனலாம். அந்த அளவிற்கு சிலப்பதிகாரம் அனைவரிடமும் கடத்தப்பட்டிருக்கிறது.