திங்கள், 16 நவம்பர், 2015

பாபு எனும் கடலூர் நண்பன்

26 ஆகஸ்ட் 2012 அன்று மாடக்குளம் கண்மயில் பசுமைநடை நிகழ்வு நடைபெற்றது. அன்று தான் முதன் முதலாக பாபு அறிமுகம். நன்றாக ஞாபகம் உள்ளது “வீழ்வேனென்று நினைத்தாயோ” என்ற பாரதியின் வரிகளை சுமந்த கை சட்டையை அன்று அணிந்திருந்தார். சிறு புன்னகை சில வார்த்தைகளுடன் அன்றைய நட்பு துவங்கியது. அதன் பிறகு ஒவ்வொரு பசுமைநடைக்கும் மாதாமாதம் சென்னையில் இருந்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். நட்பின் ஆழம் அதிகாமகிக் கொண்டிருந்தது. “வாங்க.. போங்க..” என்றிருந்த நட்பு பெயர் சொல்லி அழைத்து பேசும் அளவிற்கு பரிணாமம் அடைந்தது.

“ஏன் பாபு மாசம் மாசம் பசுமைநடை வந்துடுறீங்களே.. உங்க அம்மா அப்பா வீட்டுக்கு வரச் சொல்லி திட்டமாட்டாங்களா??” எனக் கேட்டால்.

“அய்யோ.. ரகு!! நான் எந்த ஞாயிற்று கிழமையும் வீட்டுக்கு போமாட்டேன்யா.. லீவு நாள்ல எங்கயாவது புது புது எடத்துக்கு பஸ் ஏறி போய்டுவேன். எப்பனாலும் தான்  கடலூருக்கு போவேன்.” என்பார் இயல்பாக.

முகநூலில் கூட வழிப்போக்கன் என்று தான் துணைப் பெயர் வைத்திருப்பார். அந்த துணைப் பெயருக்கு ஏற்றார்போல அவர் பணி புரிந்த நிறுவனத்தில் இருந்து அரபு நாடுகளுக்கு அவரை அனுப்பிவிட்டனர். ஒரு வருட காலம் அலைபேசியிலும் முகநூலிலும் தொடர்ந்து பசுமைநடையின் நிகழ்வுகளை கவனித்துக் கொண்டே இருந்தார். ஒவ்வொரு நடை நிகழ்ந்த பின்னும்,

புதன், 11 நவம்பர், 2015

அப்பா

அப்பா. இந்த சொல்லை உச்சரிக்கும் போதே பாசமான உணர்வினை அனுபவிப்பதை உணர்கிறேன். வாழும் கணம் வரை இந்த சொல் அந்த உணர்வினை கொடுத்துக் கொண்டேதான் இருக்கும். என் அப்பா எனக்காக இதை செய்தார், அதை செய்தார், இங்கே கூட்டிச் சென்றார், அங்கே கூட்டிச் சென்றார், இதை வாங்கிக் கொடுத்தார், அதை வாங்கிக் கொடுத்தார் என எதையும் என்னால் சொல்ல இயலாது. ஏனென்றால் இதில் எதையும் அவர் செய்ததில்லை. அதற்கான வாய்ப்பும் அவருக்கு வாய்க்கவில்லை. எனக்கு விவரம் தெரிய ஆரம்பிக்கும் போது இரவில் பணி முடித்து வரும் போது காரச் சேவு, பக்கோடா ஏதாவது வாங்கிவருவார். பாதி உறக்கத்தில் எழுந்து அமர்ந்து அவற்றை தின்று விட்டு காலையில் எழுந்து “அப்பா திங்க என்ன வாங்கீட்டு வந்தீங்க?” என கேட்பேன். அவர் எனக்காக வாங்கிக் கொடுத்தது என்று என் நினைவில் இருந்து சொல்ல வேண்டும் என்றால் இதை சொல்லலாம். கூட்டி சென்ற இடம் என்றால், முடி வெட்டுவதற்கு ஊத்துக்கு (ஊற்று) கூட்டிச் சென்று அங்கு குளித்துவிட்டு வருவோம். குண்டாற்றின் கரையில் சாதிக்காக ஏற்படுத்தப்பட்ட குளிக்கும் இடம் அது.

ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது என்னை தூக்கிக் கொண்டு பள்ளிக்கூடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அதோடு முடிந்துவிட்டது அவரது நடமாட்டம். எனக்கு நன்றாக நினைவுள்ளது, அவருக்கு சாதாரண காய்ச்சல் தான். அப்பாவினுடைய அம்மா இருக்கும் வரை அவருக்கு கைவைத்தியம் தான் என சொல்வார்கள். என் அம்மா சற்று அதீத அக்கறையுடன் ஆங்கில மருந்துக்கு மாற்றினார் அப்பாவை. திருமங்கலத்தின் அப்போதைய மிகப் பிரபலமான மருத்துவர் நடராச ரத்தினம். அவரிடன் ஆலோசனையின் பெயரில் அதிக வீரியமான (Heavy Dosh) மருந்தை உட்கொண்டார் அப்பா. அதன் விளைவு,