அப்பா. இந்த சொல்லை
உச்சரிக்கும் போதே பாசமான உணர்வினை அனுபவிப்பதை உணர்கிறேன். வாழும் கணம் வரை இந்த சொல்
அந்த உணர்வினை கொடுத்துக் கொண்டேதான் இருக்கும். என் அப்பா எனக்காக இதை செய்தார், அதை
செய்தார், இங்கே கூட்டிச் சென்றார், அங்கே கூட்டிச் சென்றார், இதை வாங்கிக் கொடுத்தார்,
அதை வாங்கிக் கொடுத்தார் என எதையும் என்னால் சொல்ல இயலாது. ஏனென்றால் இதில் எதையும்
அவர் செய்ததில்லை. அதற்கான வாய்ப்பும் அவருக்கு வாய்க்கவில்லை. எனக்கு விவரம் தெரிய
ஆரம்பிக்கும் போது இரவில் பணி முடித்து வரும் போது காரச் சேவு, பக்கோடா ஏதாவது வாங்கிவருவார்.
பாதி உறக்கத்தில் எழுந்து அமர்ந்து அவற்றை தின்று விட்டு காலையில் எழுந்து “அப்பா திங்க
என்ன வாங்கீட்டு வந்தீங்க?” என கேட்பேன். அவர் எனக்காக வாங்கிக் கொடுத்தது என்று என்
நினைவில் இருந்து சொல்ல வேண்டும் என்றால் இதை சொல்லலாம். கூட்டி சென்ற இடம் என்றால்,
முடி வெட்டுவதற்கு ஊத்துக்கு (ஊற்று) கூட்டிச் சென்று அங்கு குளித்துவிட்டு வருவோம்.
குண்டாற்றின் கரையில் சாதிக்காக ஏற்படுத்தப்பட்ட குளிக்கும் இடம் அது.
ஒன்றாம் வகுப்பு படித்துக்
கொண்டிருக்கும் போது என்னை தூக்கிக் கொண்டு பள்ளிக்கூடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
அதோடு முடிந்துவிட்டது அவரது நடமாட்டம். எனக்கு நன்றாக நினைவுள்ளது, அவருக்கு சாதாரண
காய்ச்சல் தான். அப்பாவினுடைய அம்மா இருக்கும் வரை அவருக்கு கைவைத்தியம் தான் என சொல்வார்கள்.
என் அம்மா சற்று அதீத அக்கறையுடன் ஆங்கில மருந்துக்கு மாற்றினார் அப்பாவை. திருமங்கலத்தின்
அப்போதைய மிகப் பிரபலமான மருத்துவர் நடராச ரத்தினம். அவரிடன் ஆலோசனையின் பெயரில் அதிக
வீரியமான (Heavy Dosh) மருந்தை உட்கொண்டார் அப்பா. அதன் விளைவு,