திங்கள், 16 நவம்பர், 2015

பாபு எனும் கடலூர் நண்பன்

26 ஆகஸ்ட் 2012 அன்று மாடக்குளம் கண்மயில் பசுமைநடை நிகழ்வு நடைபெற்றது. அன்று தான் முதன் முதலாக பாபு அறிமுகம். நன்றாக ஞாபகம் உள்ளது “வீழ்வேனென்று நினைத்தாயோ” என்ற பாரதியின் வரிகளை சுமந்த கை சட்டையை அன்று அணிந்திருந்தார். சிறு புன்னகை சில வார்த்தைகளுடன் அன்றைய நட்பு துவங்கியது. அதன் பிறகு ஒவ்வொரு பசுமைநடைக்கும் மாதாமாதம் சென்னையில் இருந்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். நட்பின் ஆழம் அதிகாமகிக் கொண்டிருந்தது. “வாங்க.. போங்க..” என்றிருந்த நட்பு பெயர் சொல்லி அழைத்து பேசும் அளவிற்கு பரிணாமம் அடைந்தது.

“ஏன் பாபு மாசம் மாசம் பசுமைநடை வந்துடுறீங்களே.. உங்க அம்மா அப்பா வீட்டுக்கு வரச் சொல்லி திட்டமாட்டாங்களா??” எனக் கேட்டால்.

“அய்யோ.. ரகு!! நான் எந்த ஞாயிற்று கிழமையும் வீட்டுக்கு போமாட்டேன்யா.. லீவு நாள்ல எங்கயாவது புது புது எடத்துக்கு பஸ் ஏறி போய்டுவேன். எப்பனாலும் தான்  கடலூருக்கு போவேன்.” என்பார் இயல்பாக.

முகநூலில் கூட வழிப்போக்கன் என்று தான் துணைப் பெயர் வைத்திருப்பார். அந்த துணைப் பெயருக்கு ஏற்றார்போல அவர் பணி புரிந்த நிறுவனத்தில் இருந்து அரபு நாடுகளுக்கு அவரை அனுப்பிவிட்டனர். ஒரு வருட காலம் அலைபேசியிலும் முகநூலிலும் தொடர்ந்து பசுமைநடையின் நிகழ்வுகளை கவனித்துக் கொண்டே இருந்தார். ஒவ்வொரு நடை நிகழ்ந்த பின்னும்,


“இந்த Walk  எப்பிடி இருந்துச்சி ரகு!! Photos-லாம் பாத்தேன்.. ரொம்ப Miss  பண்றேன்” என அழைத்து பேசுவார். அதே போல ஒரு வருடம் கழித்து தாய் மண் திரும்பியதும் அக்டோபர்-2015-ல் நிகழ்ந்த முத்துப்பட்டி பசுமைநடைக்கு ஓடி வந்துவிட்டார்.
 இப்படியான நண்பருடைய திருமணம் 15-11-2015 அன்று கடலூரில் உள்ள அவருடைய சொந்த ஊரான நெல்லிக்குப்பத்தில் நிகழ்ந்தது. பசுமைநடை நண்பர்களோடு அவருடைய திருமண விழாவிற்கு சென்று வந்தேன்.


ஒரு வார காலமாகவே கடலூரில் கடும் மழை, வெள்ளப்பெருக்கு, மக்கள் அவதி, வேளாண் நிலங்கள் நாசம் என செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. இப்படியான ஒரு இடத்தை இப்படியான ஒரு சூழ்நிலையில் சென்று காண்பதே அந்த பகுதி மக்களின் உணர்வுகளை உள் வாங்கிடவும் அச்சூழல் கொடுக்கும் படிப்பினைகளை கற்றுக் கொள்ளவும் இயலும் என எண்ணி பயணத்தினை தொடந்தேன். இரவு ரயில் பயணம் உறக்கத்தில் கடந்தாலும் தஞ்சையில் விடிந்தது. அதன் பிறகான பயணமே அரிச்சுவடி கொண்டு பாடம் நடத்த துவங்கியது. தஞ்சை குடந்தை பகுதிகளில் மழை பெய்து கொண்டிருந்தாலும் வயல்களில் பசுமையான கதிர்கள் நீருக்குள் இருந்து தலை தூக்கிக் கொண்டிருந்தன. அதன் பிறகு கடலோர பகுதியை நெருங்க நெருங்க மழையின் உச்ச பட்ச காட்சி அரங்கேறிக் கொண்டிருந்தது. சிதம்பரம் ரயில் நிலையத்தில் நண்பருடைய வாகனம் எங்களை அள்ளிக் கொண்டு ஈரமான சாலையில் மழையில் நனைந்து கொண்டே ஓடத் துவங்கியது. 

குடந்தையில் பணிபுரியும் போது கிளை மேலாளருடன் இந்த பகுதியில் பயணித்த அனுபவம் உண்டு. அப்போது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேல் என வயல்கள் சாலையின் இரு புறமும் காட்சியளிக்கும். ஆனால் இன்று கண்மாய் போல; இன்னும் சொல்லப் போனால் செங் கடல் போல காட்சியளிக்கின்றது.  சாலையின் ஓரத்தில் நின்றிருந்த மரங்கள் அனைத்தும் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன. பனை மரங்கள் மட்டும் அனைத்தையும் தாங்கிக் கொண்டு நிமிர்ந்தே நிற்கின்றன. சென்றாயன் அண்ணனுடைய கவிதை வரிகள்தான் ஞாபகம் வந்தது,
“தமிழழுக்கு ஓலை கொடுத்த செருக்கு
           நிமிர்ந்தே நிற்கிறது பனை!”

இந்த சிதம்பரம் கடலூர் சாலையில் காவேரியின் கிளை நதிகள் ஒவ்வொன்றாக கடந்து கொண்டிருந்தன. அனைத்திலும் செந்நீர் பொங்கி ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு சில இடங்களில் நீர் எங்கோ இருந்து கரை புரண்டு ஓடி வருகிறது.

“எங்கயோ ஒன்னு ஒடப்பு விழுந்துடுச்சி.. அதான் இப்படி தண்ணி ஓடியாருது” என்று பேசிக் கொண்டோம்.

மின்கம்பங்கள் வழி நெடுக சாய்ந்து கிடக்கின்றன. மின் கம்பிகள் நீருக்குள் மூழ்கியபடி கிடக்கின்றன.

“அய்யோ இப்படி இருந்த கரண்ட் பாஸாகுமே..!!” என பதறும் போது

“மூனு நாளா கரண்ட் இல்லங்க எங்கயுமே!!” என பதில் அளித்தார் வாகனம் ஓட்டும் அண்ணன்.

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே மின்வாரிய தொழிலாளர்கள், மின் கம்பங்களையும் மின்கம்பிகளையும் சீரமைக்கும் பணியை செய்து கொண்டிருந்தார்கள். வழி நெடுக மழையிலும் அவர்கள் தங்களது பணியை செய்து கொண்டிருந்தனர். ஞாயிற்றுக் கிழமை, புயல் மழை, வெள்ளம் என எதையும் பார்க்காமல் உழைக்கும் இவ்வுழைப்பாளிகள் உழைப்பு எவ்வளவு மகத்தானது. உழைப்பாளிகள் இல்லாத நாடு எப்படி இருக்கும் என கற்பனையும் செய்து பார்க்க இயலாது.


மழை வெள்ளத்திற்கு நடுவில் நிகழ்ந்த பாபுவின் திருமணம் வாழ்க்கை மீதான எதார்த்தத்தை எடுத்தியம்பியது. நண்பர் பாபுவுடைய திருமண விழாவில் கலந்து கொண்டு அவருடைய பெற்றோர் உடன் பிறந்தோர் மற்றும் அவருடைய இணை அனைவரையும் கண்டு, அன்பை பரிமாறிக் கொண்டு கிளம்பினோம்.

மீண்டும் அந்த காட்சிகள் மீண்டு வந்து கொண்டிருந்தன. சமகாலத்தில் சுனாமி, தானே புயல், மழை வெள்ளம் என கடலூர் தன் நிலவியல் அமைப்பால் அனுபவிக்கும் இன்னல்கள் தொடரத்தான் செய்கிறது. நீர் சூழ்ந்த இவ் வேளாண் நிலங்களில் என்று தண்ணீர் கசியப் போகிறதோ!? விவசாயி எனும் சொல்லின் விழுமியங்கள் என்னாகுமோ? இம்மக்களுக்கும் அரசுகள் உண்டுதானே!! மின் கம்பங்கள் நின்று விடும், விழுந்த இம்மரங்கள் என்று எழும்? ஒரு மணிநேர மின் வெட்டுக்கே புலம்பி, புழுங்கி தவிக்கும் எனக்கு, மூன்று இரவு இருளை கடத்திவிட்டு, இன்னும் எத்தனை நாள் இருளோ என எண்ணித் தவிக்கின்ற இவர்களின் வாழ்வியலை நான் எப்போது கற்க போகிறேன்?

இந்த கேள்விகளுக்கான கற்றலையும் கடந்து.. விழுந்த வீடுகள், சூனியாமாகிப் போன வாழ்க்கை இவ்வனைத்தையும் அனுபவித்து கொண்டே, கொக்கி அருந்துபோன காக்கி டவுசரை முடிச்சி போட்டுக்கொண்டு மேல் சட்டையின்றி மழையில் நனைந்து உறவாடும் இப்பகுதி சிறுவர்களிடமும் நான் கற்க வேண்டியவை ஏராளம் இருக்கின்றது. நான் செயல்பட இந்த கற்றலே எனக்கு அத்தியாவசியமாகிறது.



அன்பும் நன்றியும்
பாடுவாசி

paaduvaasi@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக