சனி, 19 ஜனவரி, 2019

வைகை நதி நாகரிகம் – நூல் பார்வை



        கீழடி – இந்த ஐந்து ஆண்டுகளில் தவிர்க்க முடியாத சொல்லாக இருந்து வருகிறது. இனி வரும் காலங்களிலும் தொல்லியல்துறையில் மறுக்க முடியாத, மறக்க முடியாத சொல்லாக இருக்க போகிறது. கீழடி தனக்குள் புதைத்து வைத்திருந்த வரலாற்று புதையல்களின் வீரியமே அதற்கான முக்கிய காரணம். இன்று வரை கண்டுகொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள ஆதிச்சநல்லூர் அகழாய்வின் படிப்பினையில், கீழடியும் ஆதே சூழலுக்கு ஆட்பட்டுவிடும் என்கிற முன்னெச்சரிக்கையும் தொல்லியல் வரலாற்று ஆர்வளர்களிடம் அதிகமாகவே இருந்து வருகிறது.

          
          கீழடி அகழாய்வு குறித்த தகவல்களும் செய்திகளும் மிக பரவலானதற்கு மதுரை மக்களும் முக்கிய காரணம் என்பதை தவிர்க்க முடியாது. காலம் காலமாக குழந்தைக்கு சோறூட்டுவதில் இருந்து தூங்க வைக்கிற வரை தாலாட்டுக்கு இணையாக கதை சொல்லுதலை காணலாம். அப்படியாக சொல்லப்படுகிற நாட்டார் கதைகளில் உள்ள வரலாற்றையும் அதன் கதை மாந்தர்களையும் இங்கே அநேகம் அறிந்துள்ளனர். சிலப்பதிகாரத்தை வாசித்தே இராதவனுக்கும் இங்கு சிலப்பதிகாரத்தின் கதை தெரியும். அதுவும் போக திருமலைநாயக்கர் அரண்மனையும் மீனாட்சியம்மன் கோயிலும் பத்துத்தூணும் விளக்குத்தூணும் மிஞ்சி நிற்கும் கோட்டையும் எஞ்சி நீண்ட மைய வீதிகளும் மதுரைக்குள் வாழும் நுழையும் யாவரையும் கால இயந்திரத்திற்குள் ஏற்றி வரலாற்று காலத்திற்குள் கொண்டுபோய் விட்டுவிடுகிறது. அதன் நீட்சியாக பசுமைநடை போன்ற வரலாற்று தொல்லியல் சார்ந்த நிகழ்வுகளுக்கு 100 மாதங்களாக தொடர்ச்சியான ஆதரவு இம்மக்களிடம் இருந்து கிடைத்துவருகிறது.

வெள்ளி, 21 ஜூலை, 2017

நாட்டார் வாழ்வியல் கல்வெட்டு

           “தானம் கொடுக்கிற மாட்டை பல்ல பிடிச்சி பார்க்காதே!!” இந்த சொலவடை இன்றும் புழக்கத்தில் உள்ளது. நாட்டுப்புறங்களில் உள்ள மக்கள் துவங்கி, அங்கிருந்து தங்களை பிடுங்கி நகரத்திற்குள் நட்டுக் கொண்ட மனிதர்கள் வரை இந்த சொலவடையை கடக்காமலோ, உச்சரிக்காமலோ இருந்திருக்கமாட்டோம். சாதாரணமாக மக்கள் புழங்கும் சொலவடைகள், கதைகள், நாட்டார் தெய்வங்கள், பண்பாடு, அறிவியல் என அனைத்திலும் வரலாற்றின் எச்சங்கள் சிதறிக்கிடக்கின்றன. நாட்டுப்புறங்களில் புழங்கப்படும் வழக்குகள் ஒவ்வொன்றும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியவை.

           
           அரச குல கதைகளை மட்டும் புனைவுகளோடும் மிகைப்படுத்தியும் பொன் பொருளுக்காக எழுதித் தொலைத்த புலவர் பெருமகனார்கள் மக்களுக்கான வாழ்வியலை, கதைகளை வரலாறுகளை பெரும்பாலும் எழுதாமலே தவிர்த்துள்ளனர். ஆனால் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய மக்களின் மொழியாலான சொலவடைகள், வழக்குகள் - அவர்களின் வாழ்வியல் வரலாறுகள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.  “தானம் கொடுக்கிற மாட்டை…” என்கிற சொலவடை போன்றே இன்றைய தலைமுறையிலும் உயிர்ப்போடு நின்றுகொண்டிருக்கிறது மதுரை மாடக்குளம் கண்மாய்க்குள் அந்தக் கல்வெட்டு.

சனி, 11 மார்ச், 2017

இடுகாட்டுக்குள் ஒரு இலக்கியம் உயிரோடு...

          சிலப்பதிகாரம் எனும் காப்பியத்தை இதுவரை வாசித்தது இல்லை. பத்தாம் வகுப்பின் தமிழ் பாடத்தில் செய்யுளாக மனப்பாட பகுதியில் அதன் சிறிய பகுதியை படித்ததோடு சரி. ஆனால் சிலப்பதிகாரத்தின் கதை; கதை மாந்தர்கள்; கதைக் களம்; நீதி என அத்துணையும் இங்கு என்னைப் போல அனைவருக்குமே அத்துப்படி. பிறந்தது முதல் சிலப்பதிகாரத்தை வாசித்திராத என்போன்றோரும் ஏதோ ஒரு காலகட்டத்தில் இந்த கதையின்பால் ஈர்க்கப்பட்டிருப்பார்கள். கதைசொல்லிகள் சூழ்ந்த இம் மண்ணில் சிலப்பதிகாரம் எனும் இலக்கியக் காப்பியம் மக்களோடு புலங்கிக் கொண்டே இருக்கிறது. கண்ணகி என்கிற பெயரையோ; கோவலன் என்கிற பெயரையோ; மாதவி என்கிற பெயரையோ அறியாதவர்கள் யாருமே இங்கு இல்லை எனலாம். அந்த அளவிற்கு சிலப்பதிகாரம் அனைவரிடமும் கடத்தப்பட்டிருக்கிறது.

வெள்ளி, 11 நவம்பர், 2016

அம்மா (அப்பாவுக்கு முன்னும் பின்னும்)

நவம்பர் 12, அப்பா இறந்த தினம். இந்த நாள் வருகிறபோதெல்லாம், அப்பாவின் மரணத் தருவாய் நினைவுகளில் வருவதைப் போலவே அம்மாவைக் குறித்தும் பல நினைவுகள் வந்து நிற்கிறது. அம்மா ஒரு கடவுள் பைத்தியம். ஒரு காலத்தில் நானும் கூட கடவுள் பைத்தியம்தான். ஆனால் அம்மா அளவிற்கு இருக்க முடியாது. செவ்வாய், வெள்ளி மறக்காமல் கோயிலுக்கு போய்விடுவார். ஏதாவது அரசு விடுமுறை தினங்களோ, பள்ளி பரிட்சை விடுமுறை தினங்களோ செவ்வாய் வெள்ளி கிழமைகளாக இருந்தால், மாரியம்மன் கோயில் பத்திரகாளியம்மன் கோயில், சமயங்களில் குமரன் கோயில், மீனாட்சியம்மன் கோயில் என ஊருக்குள் இருக்கும் எல்லா கோயில்களுக்கும் அழைத்து சென்றுவிடுவார். வெள்ளிக் கிழமைகளில் விரதமிருந்து (மதியம் மட்டும் ஒரு வேளை உணவு உண்டு) கோயிலுக்கு செல்வார். எலுமிச்சை பழம், பஞ்சு திரி, நெய், சின்ன சின்ன மண் அகல் விளக்குகள் என அவருடைய கோயில் பை திருநீரும் குங்குமமும் மணந்தபடி இருக்கும். கோயில்களில் எலுமிச்சை பழத்தை வீணாக்கி, அதாவது எலுமிச்சை பழத்தை அம்மன் சிலைக்கு முன் பிளிந்து அந்த சிட்ரிக் அமிலத்தை தரையில் வட்டமாக ஈரப்படுத்தி, அதன் மேல் சின்ன கோலமிட்டு, பிளிந்த எலுமிச்சையின் தோல் பகுதியை பிரட்டிவிட்டு அதில் நெய் ஊற்றி, திரி வைத்து விளக்கு ஏற்றுவார். யாராவது புஷ்..புஷ்… என சப்தமிட்டு சாமியாட துவங்கிவிட்டால், அவர்களிடம் குறி கேட்க துவங்கிவிடுவார்.

சனி, 5 நவம்பர், 2016

குமரி நிலநீட்சி நூலும் சில தெளிவுகளும்

           ஆய்வு நூட்களை வாசிக்க இப்போதெல்லாம் ஆர்வமாக உள்ளது. வரலாற்று / பண்பாட்டு ஆய்வுகள் என்றால் கூடுதல் ஆர்வம் ஒட்டிக்கொள்கிறது. ஆய்வாளர் தொ.பரமசிவன் அவர்களின் ஆய்வு நூட்களே இப்படியான ஆர்வத்தை எனக்குள் தூண்டியிருக்கிறது. பண்பாட்டு, மொழி ஆய்வு கடந்து இன்னும் முன் சென்று கடல், நிலம், மனிதகுலம் போன்றவற்றின் வரலாற்று ஆய்வுகளை வாசித்து அறிகிற வாய்ப்பு எழுத்தாளர் சு.கி.ஜெயகரன் அவர்களது “குமரி நிலநீட்சி” நூல் மூலமாகக் கிட்டியது. குமரிக்கண்டம் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் வாசிக்கத் துவங்கினேன். எஸ்.வி.ராஜதுரை ஐயா அவர்களது முன்னுரையை வாசிக்கும் போதே, ‘இந்நூல் குமரிக்கண்டம் குறித்தான எனது பார்வையை மாற்றியமைத்துவிடுமோ!’ என அஞ்சி வாசிப்பை தவிர்த்துவிடுகிற என்கிற எண்ணம் கூட வந்துவிட்டது. நூலாசிரியர் தனது அறிமுக உரையில்

“தமிழின் தொன்மையை கற்காலத்திற்கும் முற்பட்ட காலத்திற்கும் தள்ளுவது ஏற்புடையதன்று. காலக்கணிப்பை மிகைப்படுத்துவதால் தேவையற்ற சர்ச்சைகளும் குழப்பங்களும் ஏற்படுகின்றன. வரலாற்று ஆய்வு எனும் ஒளிபுகாத காலத்திற்குத் தமிழனின் தொன்மையை கொண்டு செல்வதனாலேயே தமிழினம் பெருமையடையுமா? தொன்மையை மிகைப்படுத்துவதால், தமிழருக்கு பெருமை சேர்க்கும் பரிமாணங்கள் பற்றிய நம்பகத்தன்மை குறைந்துவிட வாய்ப்புகளுண்டு.”

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

சாராய குடிக்கி புள்ளையாரு

“சாராயத்த ஊத்தி கருப்பனுக்கு வையிங்கடான, எழவெடுத்த மவனுக நேத்து வந்த புள்ளயாருக்கு வச்சிருக்கானுக!! அவென் குடிச்ச எச்சைய குடிக்க எங் கருப்பென் என்ன தொன்னாந்து போயா நிக்கிறான்!!??”

குலதெய்வம் கும்புட ஆரம்பிக்கிறப்பலாம் இந்த கன்னியப்பென் தண்ணிய போட்டுட்டு ஏதாவது ஏழரைய இழுக்க ஆரம்பிச்சிடுறான்

“ஏழேய்!! நான்தான் சொல்லீட்டேன்லடா.. தெரியாம அங்க வச்சிட்டாங்கனு. கருப்பனுக்கு வேற சரக்கு வாங்கி ஊத்தி வச்சிடுவோம்டா கன்னியப்பா.. பிரச்சனை பண்ணாம வீட்டுக்கு போடா. யோவ்.. கொஞ்சமாவது வெவரம் வேணாமாயா.. எத எங்க படைக்கிறதுனு!?”

பூசாரி கொஞ்சம் பக்குவமா சொன்னதும், அப்போதைக்கு அமைதியாகிட்டான். இல்லனா இனியாரம் யாரும் பதில் பேச முடியாத அளவுக்கு கேள்வியும் வசவுமா தூள் பறக்கும். கோயில் மேட்டுல நின்னுக்கிட்டு இருந்த கூட்டம் முழுக்க கன்னியப்பன் அடுத்து என்ன பண்ண போறயான்னு பாத்துகிட்டே நின்னுச்சி.

வெள்ளி, 8 ஜூலை, 2016

மண்ணுக்கடியில் மாநகரம்

           “//மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து உறவாடுவதால் மட்டுமே தமக்குள் பொதுவான அம்சங்களை அடைகிறார்கள். அதாவது சமூகமானது மனிதர்கள் கலந்து உறவாடுவதால் மட்டுமே சமூகமாக இருக்கிறது.//
//ஒரே மாதிரியான திருவிழாக்கள், அவற்றை இணையாகக் கொண்டாடும் பல்வேறான சாதிகளை ஒன்றுபட்ட ஒரே சமூகமாக இணைத்துவிடுவதில்லை. அப்படி இணைக்கப்பட வேண்டுமானால் அவர்கள் பொதுவான நடவடிக்கையில் பங்கு பெறுவதும் பகிர்ந்து கொள்வதும் அவசியம்.//
//கூட்டு நடவடிக்கைகளில் தனிமனிதனை – பங்கு பெறவும் பகிர்ந்து கொள்ளவும் செய்யும் போதுதான் – அந்த கூட்டு நடவடிக்கையின் வெற்றியைத் தன் வெற்றியாகவும், தோல்வியை தன் தோல்வியாகவும் அவன் உணர்வான். இது உண்மையில் மனிதர்களை ஒன்றிணைத்து ஒரே சமூகமாக ஆக்கும் விசயம் ஆகும்.//”